Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 94

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
681
அத்தியாயம் 94


வாகன விபத்து என்பதால் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து மித்ராவின் உடலை பெறுவதற்கு நள்ளிரவுக்கு மேல் ஆகி போனது.

மித்ரா மரணித்து விட்டாள் என்று மருத்துவர்கள் உறுதி செய்ததுமே,
மதுராவிற்கு தகவலை தெரிவித்து இருந்தார் சுப்பிரமணியம்.

கிருஷ்ணாவுக்கு இருந்த உணர்வுபூர்வமான ஒரே உறவு செர்ரி மட்டும்தான். ஆதலால் செர்ரிக்கு அவன் தகவல் சொல்ல,
மறுநாள் அதிகாலையில் விமான பயணத்தை மேற்கொண்டு செர்ரி வந்து சேர, அடுத்த இரண்டு மணி நேரத்தில் மதுராவும் வந்து சேர்ந்தாள்.

வேறு சொந்த பந்தங்கள் ஏதும் இல்லாததால், காலையிலேயே
மித்ராவின் உடல் முறைப்படி சடங்குகள் செய்து தகனம் செய்யப்பட்டது.

அவள் ஆசைப்பட்ட திருமணம் திருமண மேடையில் நடக்காமல், அவள் இறந்த பிறகு தகன மேடையில் நடந்தாலும், பிரிவே இல்லாத பூரண பந்தமாகி,
கணவனாய் வரித்தவனின் கைகளாலேயே கடைசிக் கொள்ளியும் வாங்கிக் கொண்டு வாழ்வரசியாய் வானுலகை அடைந்து விட்டாள்.

அவளை மரணப்படுக்கையில் கண்டதும், அவன் துடித்து வடித்த கண்ணீர் ,
அவள் மனதில் எரிந்து கொண்டிருந்த நீண்ட நாள் ஏக்கத்தையும், ஏகாந்தத்தையும் அணைக்க,
எண்ணியதை சாதித்த மகிழ்ச்சியை
கிற்றாய் பனித்த பார்வையில் வெளிப்படுத்திவிட்டு விண்ணுலகம் சென்றுவிட்டாள்.

ஓரிரு மணி நேரம் பூஜைக்காக வந்து போகும் ஐயரே மித்ராவின் மனநிலையை ஆழமாக
படித்திருக்கும் பொழுது, அவளுடன் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயணித்தவனுக்கு
அவளது ஆழ் மனதின் அபிலாஷைகள் தெரியாதா... என்ன....

தொடக்க காலத்திலேயே அவளது பார்வையில் தெரிந்த ஏக்கத்தையும் மாற்றத்தையும் கண்டு கொண்டதால் தான் இயல்பாகப் பேசிப்பழகி அவளை துன்பப்படுத்தாமல், விலகி இருந்தான்.

அதுவும் கடைசி சந்திப்பின் பொழுது
அவள் பேசிய வார்த்தைகள் குறைவு ஆனால், அவளது மனமும் நயனமும் பேசியவைகள் அளப்பறியாதது.

இந்த இரண்டரை ஆண்டு கால வாழ்க்கை பயணத்தில், என்றுமே அவனை தனியே சந்தித்து பேச முயலாதவள் , ஏதோ ஒரு
உள்ளுணர்வு உந்துதலால் தான்
அவன் அறைக்கே வந்து
மனதில் இருப்பதை மேம்போக்காக கொட்டி விட்டு, அவனே தன் இதயம் என்பதை அவனை மனதோடு அணைத்து காட்டி விட்டு விடை பெற்றதை எல்லாம் நினைத்துப் பார்த்தவனுக்கு மனம் கனத்துப் போனது.

அதி முக்கிய காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் பெயர், உறவுமுறை, அலைபேசி எண் ஆகியவற்றை தகவலாக புதிய அலுவலகத்தில் கேட்டிருந்த நிலையில்,
அவனுடைய பெயர் , அலைபேசி எண்ணை கொடுத்திருந்ததோடு உறவு முறை என்ற இடத்தில் கணவர் என்றும்
கொடுத்திருந்ததாக பிறகு விசாரித்து தெரிந்து கொண்டான்.


மறுநாள் இரவு செர்ரி,

" வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு உடனே பதில் கிடைக்கிறது இல்ல ....
அஞ்சு வருஷம் பத்து வருஷம் கழிச்சு
அனுபவத்துல தான் உணர்ந்துக்க முடியுது .... மித்ரா விஷயமும் ஏறக்குறைய அப்படித்தான் .... அவ உன் வாழ்க்கையில் வந்ததே உனக்கு குழந்தையை பெத்து கொடுத்துட்டு போகணும்னு வந்தா மாதிரியே இருக்கு டா ...

நீ எதுக்காக அன்னைக்கு ரோட்ல மாதேஷ காப்பாத்தணும் .... மித்ராவ சந்திக்கணும்....மாதேஷுக்கு இப்படி ஒரு வியாதி இருந்து, அது குணப்படுத்த வேண்டி அவ உன் குழந்தைக்கு சரோகேட் மதரா இருந்து
மயூரிய பெத்துக்கொடுக்கணும்... அதோட ஏன் இவ்ளோ சீக்கிரம் அவளை கடவுள் கூப்பிட்டுக்கணும் ....
நடந்த எல்லாத்தையும் யோசிச்சு பார்த்தா, அடுக்கி வச்ச மாதிரி
ஒன்னுக்கு பிந்தி ஒன்னு நடந்து முடிஞ்சிருக்கு .... ஆனா காரணம் தான் விளங்கல ....

மித்ரா விஷயத்தை விடு .... மாதவி விஷயத்துலேயே நமக்கு இன்னும் காரணம் தெரியலையே ....

நல்லா இருந்த பொண்ணு எதுக்கு அப்படி பேசிச்சு, பண்ணுச்சுன்னு புரியல ..... நான் ஊர்ல தான் இருக்கேன் ...சூரிய கிரன் கல்யாணத்துல மாதவியை பார்த்ததோட சரி .... அவ உள்ளூர்ல தான் இருக்காளா ....வெளியூர் போயிட்டாளா .... எந்த விஷயமும் தெரியல .... ஓவர் ஸ்ட்ரெஸ்ல உடம்பு அடி வாங்கினதால, பெரியப்பாவும் அப்பாவும் தான் தோட்டம் தொறவு காடு கம்பெனினு எல்லாத்தையும் பாத்துக்குறாக .... பெரும்பாலும் நான் வீட்டை விட்டுவிட்டு வெளியவே போவறதே இல்லடா .... வெளியே போனா சரளாவை பத்தியும், நின்னு போன என் கல்யாணத்த பத்தி பேசி மறக்க நினைக்கிறது ஞாபகப்படுத்தி விட்டுறானுங்க.... " என்றவன் எதையோ தீவிரமாக யோசித்து விட்டு,

" சரளா சாவு, மாதவி பிரிஞ்சு போனது ,
மயூரி பொறந்தது, மித்ரா இறந்தது...
எல்லாம் தனித்தனியா நடந்திருந்தாலும், ஒன்னோட ஒன்னு ஏதோ ஒரு வகையில தொடர்புல இருக்குற மாதிரியே தோணுது டா... நம்ம ஊரே சித்தர்கள் பூமி தானே ....
இப்ப கொஞ்ச காலமா ஆன்மீகத்துல நிறைய ஈடுபாடு வருது .... சித்தர் ரகசியங்களை நிறைய படிக்கிறேன் ... அதனால இப்படி தோணுதானு தெரியல ..." என்று முடித்தான்.

ஏற்கனவே பெரும் இழப்பை சந்தித்தவன் என்பதால்,
மதுராவின் மனநிலையை சுலபமாக புரிந்து கொண்டு, அங்கிருந்த இரண்டு தினங்களிலும் அவளுக்கு ஆதரவாகவும், அனுசரணையாகவும் இருந்தான்.

இருவரும் வெளிப்படையாக காதலை பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும்,
ஒருவர் மனதில் மற்றொருவர் பதியம் போட்ட ரோஜா செடியாய் பதிந்து போயினர்.

ஓரிரு தினங்களில் செர்ரி பயணமாக,
ஒரு வார விடுப்பிற்கு பிறகு மதுரா பணியில் சேர்ந்தாள்.

நாட்கள் நகர்ந்தாலும்
கலைச்செல்வி, சுப்பிரமணியம் உள்ளுக்குள் உடைந்து போய் விட்டத்தையே வெறித்துக் கொண்டிருக்க, அவர்களை
தேற்றுவது கிருஷ்ணாவின் பணியாகி போனது.

தன் குழந்தை மயூரிக்கும் மாதேஷுக்கும் இடையே என்றுமே வித்தியாசம் பார்க்காதவன்,
தற்போது மாதேஷின் முழு பொறுப்பையும் தந்தையாக ஏற்றுக் கொண்டான்.

மித்ரா வாழும் பொழுது அவளைத் மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியாமல் அவன் மனம் சஞ்சலத்தில் உழன்றதால் மாதேஷை மகனாக மானசீகமாக ஸ்வீகரித்துக்கொண்டு
பிராயச்சித்தம் தேடினான்.

இரண்டு ஆண்டுகள் வேகமாக புரண்டோட , மதுரா CBI இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று, உதய்ப்பூர்க்கு மாற்றலாகி வந்தாள்.

தன் மகள் மித்ராவின் வாழ்க்கை
சீரழிந்ததிலிருந்தே, கலைச்செல்வி தன் பணிக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

சுப்பிரமணியம் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில், தலைமை பொறுப்பில் இருந்ததால், மகள் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகள் மிகுந்த மன உளைச்சலை தந்தாலும் வேறு வழியற்று தன் பணியை தொடர்ந்தார்.

என்ன தான் கலைச்செல்வி இளமையும் ஆரோக்கியமாய் பிந்திய 40 களில் இருந்தாலும் துருதுருவென்று இருக்கும் மயூரி, மாதேஷின்
வேகத்திற்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை.

குழந்தைகளும் வீட்டில் தனித்து விடப்பட்ட உணர்வை அவ்வப்போது உணர்வதை உள்வாங்கிக் கொண்டு அதற்கு வேறு வழியை தேட வேண்டும் என்ற எண்ணிக் கொண்டிருக்கும் போது மதுரா மாற்றலாகி வர, அவருக்கு நிம்மதியாய் போனது.

மதுராவின் பணி சில தினங்கள் இரவு பகல் பாராமல் அவளை இழுத்துக் கொண்டாலும், சில தினங்கள் பொறுமையாக உண்டு , உறங்கி , பேசி மகிழ்ந்து , செல்லும் வாய்ப்பையும் கொடுத்திருந்ததால், குழந்தைகளோடு
அவள் நேரம் செலவழிக்க, குழந்தைகளும் அவளோடு ஒன்றிப்போயின.

இந்நிலையில் ஒரு நாள் கலைச்செல்வியிடம் கிருஷ்ணா,

" எனக்கு தமிழ்நாட்டுல FSP போடற மாதிரி இருக்கு ..."

" அப்படின்னா என்ன வாசு..."

" Field season programme .... ஒரு நாலு மாசத்துக்கு அபிஷியல் கேம்ப் மாதிரி..."

" ஓ... தமிழ்நாட்ல எங்க ..."

" இன்னும் தெரியல....இன்னும் ரெண்டு மூணு நாள்ல தெரிஞ்சிரும்..."
என்று அலுவலகம் புறப்பட்டு சென்று விட்டான்.

அன்றைக்கான பணிகளை முடித்துவிட்டு, அவன் கிளம்ப எத்தனைக்கும் போது, Indian mineries corporation of remote sensing departmentல் இருந்து
அவனுக்கு அழைப்பு வந்தது.

" வாசுதேவ், சேலம் டிஸ்ட்ரிக்ட்ல, ஒரு குறிப்பிட்ட பகுதில
கொஞ்ச நாளா கனிம குவாரிகள்ல அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலா வெட்டி எடுக்குறாங்க .... குத்தகைப் பரப்பிற்கு வெளியவும் குவாரிகள் வேலை செய்யறாங்கனு
CARTOSAT-1 இமேஜஸ் எடுத்து அனுப்பி இருக்கு ... அத அங்க இருக்கிற
District directorate of geological and mineriesக்கும் தகவல் சொல்லிட்டோம் ....
ஆனா அவங்க நேர்ல போய் பார்த்து field study செஞ்சு ரிப்போர்ட் கொடுக்க மாட்டேங்குறாங்க ...."

" எந்த ஏரியாக்குள்ள வருது ...."

" ஏதோ மயூன் மங்கலம் ..." என அவர் சரியாக உச்சரிக்கத் தெரியாமல் கூற உடனே துணைக்குற்றவன்,

" நான் இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் ..." என்று துரிதமாக தான் வசிக்கும் உதய்ப்பூரில் இயங்கும்
இந்திய சுரங்க கழகத்தின் தொலை உணர்வு கட்டுப்பாடு துறைக்கு விரைந்தான்.

(CARTOSAT-1 என்பது முதல் இந்திய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் ஆகும் ...
இது கனிம வளம் நிறைந்த பகுதிகளில் சட்டவிரோதமாக நடக்கும் சுரங்கம் மற்றும் குவாரிப் பணிகளை கண்டறிந்து தடுக்க பயன்படுகிறது ..

சுரங்க குத்தகைக்கு ஒதுக்கப்பட்ட புவியியல் நிலப்பரப்பை, அந்தப் பகுதியின் செயற்கைக்கோள் வரைபடத்தோடு ஒப்பிட்டு சுரங்க குத்தகை எல்லையில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள பகுதிகளில் நடைபெறும் அனைத்து செயற்பாடுகளையும் கண்காணிக்க இயலும்.

அனுமதி அற்ற வகையில் நடைபெறும் சுரங்கப் பணிக்கு முதலில் எச்சரிக்கை விடப்படும் .... பிறகு களப்பணி மேற்கொண்டு நிரூபனமானால் முற்றிலும் முடக்கப்படும் ....)

கிருஷ்ணா, அந்த செயற்கைக்கோள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களை பார்க்கும் பொழுது, சட்டவிரோதமாக குத்தகைக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகவே கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவது தெரிய வந்தது.

உடனே சில அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடைபெற்ற பிறகு

" ஒன்னு பண்ணுங்க வாசுதேவ் .... நீங்க உங்க ஃபீல்டு ப்ரோக்ராமை தமிழ்நாட்டுல இருக்கிற மாயோன் மங்கலத்துக்கு போட்டுக்குங்க ....
ஏன்னா அந்த இடத்துல மாலிப்டினம் அதிகமா கிடைக்குது ... நமக்கும் அது ரொம்ப தேவையா இருக்கு ....

அதோட
யாரோ அரசியல் பின்புலம் உள்ள பெரிய கை தான் குவாரி விஷயத்துல சட்டவிரோதமா நடக்குறாங்கன்னு தோணுது ...
குத்தகைகளை பெரும்பாலும் பினாமிங்க பேர்ல எடுக்கிறதால யாரு என்னன்னு புரிய மாட்டேங்குது ....
நீங்க நேர்ல போனீங்கன்னா,
நேரோ டவுன் பண்ணிடலாம்னு தோணுது ..." என்று அவன் உயர் அதிகாரி கூறிமுடிக்கும் போது, அங்கு பணியில் இருந்த பொறியாளர்

" வாசுதேவ் இங்க பாருங்க ...
ஸ்பெக்ட்ரல் ரிமோட் சென்சிங் இமேஜஸ் எடுத்து அனுப்பி இருக்கு ....

இதுல பரீட் ஆப்ஜெக்ட்க்கு(Buried objects) நடுவுல ஹியூமன் ட்ரேஸஸ், ஐ மீன் Skeleton( மனித எலும்புக்கூடு) மாதிரி சிலது தெரியுது பாருங்க ...." என கணிப்பொறியில் அந்த குறிப்பிட்ட படங்களை காட்டி
கூற, உறைந்து நின்று விட்டான் கிருஷ்ணா.

(ரிமோட் சென்சிங்கில் பலவகை உண்டு. ஸ்பெக்ட்ரல் ரிமோட் சென்சிங்,
பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கும்
கனிமங்கள் மற்றும் இதரவைகளை கண்டறிய பயன்படுகிறது) .

மாயோன் மங்கலத்தில் கல்குவாரியின் சுற்றியுள்ள பகுதியின்
பூமிக்கடியில் எலும்புக்கூடுகள் கிடைக்கிறது என்றதும், கிருஷ்ணாவுக்கு
தனசேகரன் தான் நினைவுக்கு வந்தார்.

எடுத்த எடுப்பில் எந்த முடிவையும் எடுத்து விடக்கூடாது என்றெண்ணியவனிடம் அவன் தலைமை அதிகாரி

" வாசுதேவ், இட் இஸ் எ பர்னிங்க் இஷ் யூ....சீரியஸ்லி நீங்க அங்க போயே ஆகணும் ....
ஏன் சொல்றேன்னா, ஸ்பெக்ட்ரல் ரிமோட் சென்சிங்க விட, நீங்க அந்த களத்துலயே போய் GPR( Ground Penetrating Radar) ஐ யூஸ் பண்ணீங்கன்னா, இன்னும் கிளியர் பிக்சர் கிடைக்கும் .... அதோட இந்த விஷயத்தை நான் போலீஸ் டிபார்ட்மெண்ட்க்கும் இன்பார்ம் பண்றேன் ..." என முடித்தார்.

ஏகப்பட்ட குழப்பத்தோடு அவன் வெகு தாமதமாக வீடு வந்து சேர, அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள் மதுரா.

" அத்தான் , உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் .... அதுக்காக தான் தூங்காம காத்துக்கிட்டு இருக்கேன் ..."

" சொல்லுமா ..."

" ஒரு ரஷ்யன் கேர்ள், பேரு லாரா...இங்க உதய்ப்பூர்ல இருக்கிற ஒரு குடும்பத்துல கெஸ்ட்டா வந்திருக்கா .... கொஞ்ச நாள் உதய்பூர்ல தங்கி இருக்கா .... அப்புறம் இந்தியா முழுக்க சுத்தி பார்க்கணும்னு எல்லா இடமும் போயிருக்கா....
அவ கூட அந்த உதய்ப்பூர் ஃபேமிலிலய சேர்ந்த அவ வயசுல்ல ஷில்பாங்கிற பொண்ணும் கூட போய் இருக்கு ....
இவங்க தமிழ்நாட்டை சுத்தி பார்க்கும் போது, மாயோன் மங்கலம் போயிருக்காங்க ...அதுக்கப்புறம் அந்த ரெண்டு பொண்ணுங்களையும் காணலயாம்.... அந்த பொண்ணோட அப்பா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காரு ....

அந்த பொண்ணு ஃபோன்ல கடைசியா பேசும் போது மாயோன் மங்கலத்துல இருக்கிறதா தான் அவங்க அப்பா கிட்ட சொல்லி இருக்கு ...
அதுக்கு மேல அந்த பொண்ண காண்டாக்ட் பண்ண முடியல அந்தப் பொண்ணுங்களையும் காணோம் ....
அவங்க அப்பா கொஞ்சம் பெரிய பிசினஸ்மேன் போல ...
யாரையோ யாரையோ தமிழ்நாட்டுல புடிச்சு பிரஷர் கொடுத்து லோக்கல் போலீஸ் வச்சு தேடி இருக்காங்க ...

நோ யூஸ் ....

அதனால அவங்க அப்பா அந்த கேச சிபிஐக்கு மாத்தி இருக்காரு ....
அந்த கேஸ் இப்ப என்கிட்ட வந்து இருக்கு ..." என அவள் முடிக்க
அதிர்ச்சியில் உறைந்து இருந்தவன் ,
சுதாரித்துக் கொண்டு, அவனது அலுவலகம் மற்றும் ரிமோட் சென்சில் டிபார்ட்மெண்டில் நடந்த அனைத்தையும் கூறி முடித்தான்.

அதற்கு மேல் நடந்ததெல்லாம் மின்னல் வேகம் தான் சுரங்க தொலை உணர்வு கழகம், காவல்துறையோடு கைகோர்த்து களம் இறங்கியது.

அவர்கள் போட்ட திட்டத்தின் படி,
கிருஷ்ணா மற்றும் அவனது குழு
கனிம ஆய்வுக்காக மாயோன் மங்கலம் செல்ல வேண்டும் .

மாயோன் மங்கலத்தில் புவியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் வருவது வழக்கம் என்பதோடு, கிருஷ்ணா குழு மேற்கொள்ளவிற்கும் மாலிப்டினம் கனிம ஆய்வும் உண்மை என்பதால்
அவர்களால் மிக எளிதாக அந்தப் பகுதிகளில் பிரவேசித்து ஆதாரங்களை திரட்ட முடியும்
என்பதால் அப்படி திட்டம் போட்டனர்.

அவனது குழுவில் இரண்டு சிபிஐ அதிகாரிகள், குறிப்பாக GPRல் நிபுணத்துவம் பெற்றவர்கள் இடம்பெற வேண்டும்.

சிபிஐ அதிகாரிகளாக ஊருக்குள் நுழையாமல் புவியாளர்களாக நுழைந்து,
மண்ணுக்கடியில் மனித எலும்புக்கூடுகள் இருக்கின்றனவா என்பதை ஆதாரத்தோடு கண்டறிந்ததும், அவைகள் தொலைந்து போன பெண்களின் எலும்புக்கூடுகள் தான் என்பதும் நிரூபணமானால் சிபிஐ தன் பாணியில் விசாரணையில் தொடங்கிவிடும்.

அதற்காகத்தான் கிருஷ்ணாவின் குழுவில் சிபிஐ அதிகாரிகளான வேதாந்த் மற்றும் பிரகாஷ் புவியாளர்கள் போல் இடம் பெற்றிருந்தனர்.

செய்தியை கேள்விப்பட்ட செர்ரி,

" இதைத்தாண்டா அன்னைக்கே சொன்னேன் .... அங்க சுத்தி இங்க சுத்தி மறுபடியும் நீ நம்ம ஊருக்கே வர்ற மாதிரி சூழ்நிலை அமையுது பாத்தியா ..... நடக்கிறது எல்லாம் ஈசனோட திட்டம் டா...

நீ இப்ப சொன்ன விஷயத்துக்கும் சரளா சாவுக்கும் கூட தொடர்பு இருக்கும்னு தோணுது .....
அந்தப் பக்க கல்குவாரிய குத்தகை எடுத்தது உன் தாய் மாமன் தனசேகரன் இல்ல..?.."

" ஆமாண்டா, தனசேகரன் தான் .... கொலை நடந்ததா மட்டும் நிரூபணம் ஆகட்டும் , அப்பனும் புள்ளையும் செத்தானுங்க .." என வன்மத்தோடு முடித்தான் கிருஷ்ணா.

உடனே கிருஷ்ணா சங்கையாவை தொடர்பு கொண்டு, தன்னுடைய பணி நிமித்தமாக மாயோன் மங்கலத்தில் நான்கு மாதங்கள் தங்கப் போவதாக மட்டும் கூறி, தனக்கும் தன் குழுவிற்கும் தங்குவதற்கான ஏற்பாட்டினை செய்யுமாறு கேட்டுக் கொண்டான்.
மற்ற விஷயங்களை முற்றிலும் மறைத்து விட்டான்.

( சங்கையாவின் வீடு அவனது பணித்தளமான மலைப்பகுதிக்கு அருகில் இருந்ததால், செர்ரியிடம் வீடு பார்க்க சொல்லாமல் அதே பகுதியில் வசித்த சங்கையாவிடம் வீடு பார்க்க சொல்லி இருந்தான்)

கிருஷ்ணா மாயோன் மங்கலத்திற்கு தன்னுடனேயே மயூரி , மாதேஷை அழைத்துச் வர எண்ணினான்....

மாதேஷ் ஆரம்பப் பள்ளியில் படிப்பதால், நான்கு மாதங்கள் தொடர் விடுப்பு எடுக்க முடியாது என சுப்பிரமணியம் மறுத்துவிட்டார்.

" மயூக்குட்டி , ரொம்ப சின்ன குழந்தை ... அவள வச்சுக்கிட்டு நீங்க எப்படி ஆபீஸ் போவீங்க ...." என்றார் கலைச்செல்வி.

" அவளை நான் டே கேர்ல போடலாம்னு இருக்கேன் ....
நீங்க கவலைப்படாதீங்க .... நல்லாவே பாத்துக்குவேன் ....
குழந்தைங்க யாரும் இல்லாம என்னால வீட்ல தனியா இருக்க முடியாது .... ஒரு மாதிரி இருக்கும் ...
ப்ளீஸ் ..." என்றவன் நயந்து கேட்க,
அதற்கு மேல் தட்ட மாட்டாமல்,
மூத்தவர்கள் அனுமதித்தனர்.


இதுதான் கிருஷ்ணா ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மாயோன் மங்கலம் வந்ததற்கான காரணம்.

- மாயோனின் மாயங்கள் தொடரும்
 
Back
Top